எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டாம் ஃபெல்டன்கட்டுரைகள்

தனிப்பட்ட பொறுப்பு

நான் என்ன உணர்கிறேன் என்பதை என் நண்பனின் கண்கள் வெளிப்படுத்தின - பயம்! வாலிப வயதினரான நாங்கள் இருவரும் மோசமாக நடந்து கொண்டதால், அந்த முகாம் இயக்குனருக்கு பயந்து கொண்டிருந்தோம். அவர் எங்கள் தகப்பன்மார்களை நன்கு அறிந்தவர், எங்கள் தகப்பன்மார்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைவார்கள் என்பதை அன்புடன் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார். எங்கள் குற்றத்திற்கான தனிப்பட்ட பொறுப்பை நாங்கள் எண்ணிப்பார்க்கும்போது நிமிர்ந்து நடக்க கூட தகுதியற்றிருந்தோம்.

 

யூதாவின் மக்களுக்காக தேவன் செப்பனியாவுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார், அதில் பாவத்திற்கான தனிப்பட்ட பொறுப்பைப் பற்றிய வல்லமை மிகுந்த வார்த்தைகளை (செப்பனியா 1:1, 6-7) காண்கிறோம். யூதாவின் பகைவர்களுக்கு எதிராக அவர் கொண்டு வரும் தீர்ப்புகளை விவரித்த பிறகு (அதிகாரம் 2), அவர் தனது பார்வையை குற்றம் செய்து குற்ற மனசாட்சியுடன் இருக்கும் தம் மக்கள் மீது திருப்பினார் (அதி. 3). ”இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!“ (செப்பனியா3.1). “அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்” (செப்பனியா 3: 7)

 

அவர் தனது மக்களின் கடின இதயங்களைக் கண்டார். அவர்களின் ஆவிக்குரிய அக்கறையின்மை, சமூக அநீதி மற்றும் மோசமான பேராசை ஆகியவற்றைக் கண்டு, அன்புடன் ஒழுக்கத்தை அவர்களுள் கொண்டு வந்தார். தனிநபர்கள், தலைவர்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள் (வ. 3-4) என்றெல்லாம் அல்ல. எல்லோரும் அவருக்கு முன்பாக குற்றவாளிகள்தான்.

 

பாவத்தில் நிலைத்திருந்த இயேசுவின் விசுவாசிகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினார், “தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக் கொள்ளுகிறாயே. தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்” (ரோமர் 2:5,6). எனவே, துக்கம் ஏற்படுத்தாதபடிக்கு இயேசுவின் வல்லமையில், நம்முடைய பரிசுத்தமான, அன்பான தகப்பனைக் கனம்பண்ணும் விதத்தில், மணந்திரும்பி வாழ்வோம்.                                                                

விரும்பி கீழ்ப்படிதல்

அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கத்தை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது. 

மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவைகளுக்கு உட்படவேண்டியதாயிற்று. 

தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக. 

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர். 

விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16).

நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம். 

தோலுக்கு உள்ளே கிரியை

ஜோஸ் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞன். அவனுடைய சகோதனுடைய திருச்சபைக்கு ஒரு நாள் போயிருந்தான். அவன் திருச்சபைக்குள் நுழைவதைப் பார்த்த அவனுடைய சகோதரனின் முகம் வாடிப்போயிற்று. ஜோஸ் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், அவனுடைய இரு கைகளிலும் வரையப்பட்டிருந்த டாட்டூக்கள் தெளிவாக பளிச்சிட்டன. அவனுடைய டாட்டூக்கள் அவனுடைய பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியதாய் இருந்ததினால், அவனை வீட்டிற்கு சென்று ஒரு முழுக்கை சட்டை அணிந்துவரும்படிக்கு அவனுடைய சகோதரன் வலியுறுத்தினான். அதைக் கேட்ட ஜோஸ் சோர்ந்துபோய்விட்டான். அவர்களுடைய பேச்சைக் கேட்ட வேறொருவர் அவர்கள் இருவரையும் திருச்சபை போதகரின் முன்னிலையில் கொண்டு நிறுத்தி, நடந்ததை சொன்னார். போதகர் அதைக் கேட்டு புன்னகையோடு தன்னுடைய சட்டையின் பட்டனை அவிழ்த்தார். அவருடைய மார்பு பகுதியில் அவருடைய பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய டாட்டூ இருந்ததை அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு ஜோஸைப் பார்த்து, தேவன் நம்மை உள்ளும் புறம்பும் சுத்திகரித்துவிட்டபடியால், உன் கைகளில் இருக்கும் டாட்டூக்களை நீ மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார். 

தாவீது, தேவனால் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். தன்னுடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்ட தாவீது ராஜா, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1) என்று எழுதுகிறான். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்களோடு சேர்ந்து ஆனந்த முழக்கமிடுகிறார் (வச. 11). பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தி, அவருக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் நிறுத்தும் அறிக்கையை வெளிப்படுத்தும் ரோமர் 4:7-8 வேதப்பகுதியில், சங்கீதம் 32:1-2ஐ மேற்கோள் காண்பிக்கிறார்.

இயேசுவில் நம்முடைய பரிசுத்தம் என்பது தோலோடு அல்ல, அவர் நம்மை அறிந்து நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கிறார் (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 1:9). அவருடைய சுத்திகரிக்கும் கிரியையில் இன்று நாம் மகிழ்ச்சியடைவோம்.

சிறிய துவக்கம்

1883இல் ப்ரூக்ளைன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டபோது, அதுவே “உலகத்தின் எட்டாம் அதிசயம்” என்று கருதப்பட்டது. ஒரு கோபுரத்திலிருந்து அடுத்த முனையிலிருக்கும் கோபுரத்திற்கு கட்டப்பட்டிருந்த ஒரு கேபிள் கம்பியானது அதைத் தாங்குவதற்கு போதுமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு பெரிய கேபிள், மற்ற மூன்றையும் ஒன்றாக இணைக்கும் வரை கூடுதல் கம்பிகள் முதலில் சேர்க்கப்பட்டன. கடைசியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட துத்தநாகப்பூச்சி பூசப்பட்ட கம்பிகள் இணைக்கப்பட்டு, அந்த தொங்குபாலத்தை அதின் நாட்களில் தாங்குவதற்கு ஏற்ற விதத்தில் அமைந்தது. சாதாரணமான ஒன்றிலிருந்து துவங்கி ஆச்சரியமான ஒரு படைப்பாய் இந்த பரூக்ளின் பாலம் மாறியது. 

இயேசுவின் வாழ்க்கை வெகு சாதாரணமாய் துவங்கியது. ஒரு சிறிய பட்டணத்தில் வைக்கோல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இந்த குழந்தை பிறந்தது (லூக்கா 2:7). இந்த எளிமையான பிறப்பை மீகா தீர்க்கதரிசி, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்” (மீகா 5:2; காண்க மத்தேயு 2:6). எளிமையான துவக்கத்தைக்கொண்ட இந்த ராஜா மற்றும் மேய்ப்பர் “பூமியின் எல்லைகள் பரியந்தமும் மகிமைப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது (மீகா 5:4). 

இயேசுவின் வாழ்க்கை வெகு எளிமையாய் துவங்கியது. அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையானது,  “சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி,” தன்னை தாழ்த்தி, ஒரு குற்றவாளியாய் சிலுவையில் மரிக்க அனுமதிக்கப்பட்டது (பிலிப்பியர் 2:8). அவருடைய விலையேறப்பெற்ற அந்த தியாகத்தினால் தேவனுக்கும் நமக்கும் இருந்த இடைவெளியை அவர் பூர்த்திசெய்து, அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளினார். இந்த பண்டிகை நாட்களில், கிறிஸ்து என்னும் தேவனுடைய இந்த விலையேறப்பெற்ற பரிசை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவரை விசுவாசிக்கக்கூடுமானால், அவர் செய்த நன்மைகளுக்காய் அவரை தாழ்மையாய் துதியுங்கள். 

விசுவாசத்தால் உறுதியாய் நிலைத்தல்

1998 ஆம் ஆண்டு உலகிலேயே அதிகம் விற்பனையாகும் அலைபேசி உற்பத்தி நிறுவனமாக நோக்கியா உயர்ந்து, 1999 ஆம் ஆண்டு சுமார் நான்கு பில்லியன் டாலர்கள் லாபத்தை ஈட்டியது.  ஆனால் 2011 ஆம் ஆண்டு அதின் விற்பனை தோய்ந்து, தோல்வியின் விளிம்பை நோக்கிப் போய்க்கொண்டிருந்த இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. நோக்கியா அலைபேசி பிரிவின் தோல்விக்கு முக்கிய காரணி, சந்தை நிலவரத்தைக் கண்டு பயந்ததால் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானங்கள். அதின் மேலாளர்கள் தங்கள் வேலை பறிபோகுமோவென்று, நோக்கியா அலைபேசியிலிருந்த மென்பொருள் மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளைக் குறித்துப் பேச தயங்கினர்.

யூத ராஜாவான ஆகாஸின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் பயத்தினால் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது (ஏசாயா 7:2). இஸ்ரவேலின் ராஜாவும், சீரியாவின் ராஜாவும் ஒரே அணியாகப் படைகளை ஒன்றுதிரட்டி, யூதாவின்மேல் யுத்தம் பண்ண வந்தார்கள் (வ.5–6). தேவன் ஏசாயாவைக்கொண்டு ஆகாஸின் எதிரிகளின் ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை (வ.7) என்று அவனை ஊக்கப்படுத்தினபோதும், மதியிழந்த தலைவன் பயத்தின் காரணமாக அசீரியா ராஜாவோடு கூட்டணி வைத்து, அந்த பராக்கிரமமான ராஜாவுக்குக் கீழ்ப்படுகிறான் (2 இராஜாக்கள் 16:7–8). நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் (ஏசாயா 7:9) என்று தனக்குச் சொன்ன தேவனை அவன் நம்பவில்லை.

இன்றைக்கும் விசுவாசத்தால் உறுதியாய் நிற்பதென்பதை புரிந்துகொள்ள, எபிரெய ஆக்கியோன், "நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே"' (10:23) என்பதைக் கருத்தில் வைக்க நம்மை அறிவுறுத்துகிறார். நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற (வ.39) இயேசுவில் நம்பிக்கைவைக்க, பரிசுத்த ஆவியானவர் நம்மை பெலப்படுத்துவார்.

எச்சரிப்பின் சப்தங்கள்

நீங்கள் எப்போதாவது ஒரு விரியன் பாம்பினை அருகில் பார்த்ததுண்டா? அப்படியானால், நீங்கள் அருகில் செல்லும்போது, அதின் சத்தம் மிகவும் உக்கிரமாக இருப்பதை கவனித்திருக்கக்கூடும். ஆபத்துகள் தன்னை நெருங்கும்போது, பாம்புகள் பொதுவாக சத்தமிடும் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன என்ற ஆராய்ச்சி சொல்லுகிறது. இந்த அதிர்வலைகள், அவைகள் இருக்கவேண்டிய இடத்தைக் காட்டிலும் மிக நெருக்கமாக இருக்கின்றன என்பதை அவைகளுக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு ஆராய்ச்சியாளர், “கேட்பவர் தவறான எல்லைக்குள் வந்துவிட்டதாக, தனக்கு ஒரு பாதுகாப்பு விளிம்பை ஏற்படுத்திக்கொள்கிறது" என்று சொல்லுகிறார். 

சண்டையிடும்போது, மற்றவர்களை திட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கும்போது, அதிக ஓசை எழுப்பக்கூடும். இதுபோன்ற தருணங்களுக்கு உகந்த வகையில் நீதிமொழிகளின் ஆசிரியர் ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்: “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்” (நீதிமொழிகள் 15:1). மேலும் மென்மையான பதில், “ஜீவவிருட்சம்” என்றும் “அறிவை இறைக்கும்” (வச. 4,7) என்றும் சொல்லுகிறார். 

நாம் யாருடன் சண்டையிடுகிறோமோ, அவர்களிடம் தன்மையாய் பேசுவதற்கான முக்கியமான காரணத்தை இயேசு சொல்லுகிறார்: நாம் அவருடைய பிள்ளை என்பதை வெளிப்படுத்தும் அன்பை பிரதிபலிப்பதின்; மூலமாகவும் (மத்தேயு 5:43-45) மற்றும் நல்லிணக்கத்தைத் தேடுதலின் மூலமாகவும் (18:15) அது சாத்தியமாகும். சச்சரவுகளின் போது நம் குரலை உயர்த்தியோ அல்லது கனவீனமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தேவன் தம்முடைய ஆவியின் மூலம் நம்மை வழிநடத்துவது போல் மற்றவர்களுக்கு நாகரீகம், ஞானம் மற்றும் அன்பைக் காட்டுவோம்.

பேரழிவால் அசைக்கப்படுதல்

1717ஆம் ஆண்டு வடக்கு ஜரோப்பாவில், ஒரு மாபெரும் புயல் வீசியது. நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற தேசங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கபட்ட ஒரு தேசத்தின் அரசாங்கம் ஆச்சரியமான தீர்மானத்தை எடுத்ததென வரலாறு தெரிவிக்கிறது. குரோனிஞ்சன் தேசத்தின் நகர அதிகாரிகள், இந்தப் பேரழிவின் காரணமாக “ஜெப நாள்” ஒன்றை ஒழுங்குசெய்தனர். ஜனங்கள் அனைவரும் திருச்சபையில் கூடி, “பிரசங்கங்களை கேட்டு, பாடல்களை பாடி, மணிக்கணக்காய் ஜெபித்தனர்” என்று ஒரு சரித்திர நிபுணர் பதிவுசெய்கிறார்.

யோவேல் தீர்க்கதரிசியும், அனுமதிக்கப்பட்ட பேரழிவினை சந்தித்து தேவ சமுகத்தில் மன்றாடிய ஜனங்களைக் குறித்துக் குறிப்பிடுகிறார். திரள்கூட்ட வெட்டுக்கிளிகள் தேசத்தைச் சூறையாடி, “அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து” பாழாக்கியது (யோவேல் 1:7). யோவேலும் அவருடைய ஜனங்களும் இந்தப் பேரழிவினால் ஆழ்ந்த துயரத்திற்குள்ளாகி, “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்” (யோவேல் 1:19) என்று உதவிக்காய் கெஞ்சினர். 

நேரடியாகவோ மறைமுகமாகவோ, பாவத்தின் காரணமாகவும் விழுந்து போன இவ்வுலகத்திநிமித்தமும், வட ஐரோப்பியரும், யூதரும் பேரழிவை சந்திக்க வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 8:20-22). அந்தத் தருணங்களில் தேவனை நோக்கிப் பார்த்து ஜெபிப்பதே சரியானதென்பதை அறிந்து செயல்பட்டனர் (யோவேல் 1:19). தேவன் அவர்களைப் பார்த்து, “ஆதலால் நீங்கள் இப்பொழுதே ... உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று சொன்னார். 

நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளையும் பேரழிவுகளையும் நாம் சந்திக்க நேரிட்டால், கண்ணீரோடும் மனந்திரும்புதலோடும் தேவனிடத்திற்குத் திரும்பக்கடவோம். அவர் “இரக்கமும்” “மிகுந்த கிருபையுமுள்ளவர்” (வச. 13), நம்மை அவரிடமாய் சேர்த்துக்கொண்டு, நமக்குத் தேவையான ஆறுதலையும் உதவியையும் நமக்கு அருளுவார்.

என்ன ஒரு கண்டுபிடிப்பு!

ரேஷ்மாவின் கண்கள் ஒரு பழங்கால டிரஸ்ஸிங் டேபிளில் பதிய, அவள் அதை விருப்பத்துடன் வாங்கினாள். அதின் டிராயரைத் திறந்தபோது, அதில் ஒரு தங்க மோதிரமும், சில குடும்பப் புகைப்படங்களும், அதின் பின்னால் பெயர், இடம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. மோதிரத்தை கண்டெடுத்த அவள், அதின் உரிமையாளரிடம் ஒப்படைக்க விரும்பினாள். புகைப்படத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டுபிடிக்க எண்ணிய ரேஷ்மா, முகநூலைப் பயன்படுத்தினாள். உரிமையாளரைக் கண்டுபிடித்த, அவள் அந்த மோதிரத்தை திருப்பி ஒப்படைத்தபோது, அந்த மோதிரம் தனது குடும்பத்தின் பாரம்பரிய சொத்து என்றும், இழந்த மோதிரத்தைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் உரிமையாளர் கூறினார்.

2 இராஜாக்கள் 22:8இல், இல்க்கியா “கர்த்தருடைய ஆலயத்தில் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டபோது” ஒரு அசாதாரணமான காரியத்தை கண்டுபிடித்தார் என்று வாசிக்கிறோம். “கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக” (வச. 5) ஜோசியா ராஜாவால் அறிவுறுத்தப்பட்டதால், அதை பழுதுபார்க்கும் முயற்சியில் அங்கிருந்த உபாகம புத்தகத்தைக் கண்டெடுத்தனர். “ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது” அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார் (வச. 11). யூதேயாவிலுள்ள திருச்சபையைப் போலவே, தேவனையும் அவர் அருளிய வேத வசனங்களைப் படிப்பதும் கீழ்ப்படிவதும் மக்களால் புறக்கணிக்கப்பட்டது. மனந்திரும்பிய ராஜா, ஆலயத்திலிருந்த விக்கிரகங்களை அகற்றி, தன் தேசத்தை சீர்திருத்தத்திருக்கு வழிநடத்தினான் (23:1-24). 

இன்று தேவனுடைய  ஞானத்தையும் போதனையையும் வெளிப்படுத்தும், உபாகமம் புத்தகத்தையும் சேர்த்து 66 புத்தகங்கள் நமது வேதாகமத்தில் இடம்பெற்றுள்ளது. அவற்றைப் படிக்கும்போதும், கேட்கும்போதும், பரிசுத்த ஆவியானவர் நம் மனதை மாற்றி, நம் வழிகளைச் சீர்திருத்துவார். இன்று வேதாகமத்தின் வாழ்க்கையை மாற்றும் கதையில் மூழ்கி, வாழ்நாள் முழுவதும் ஆராய்வதற்கான ஞானத்தைக் கண்டறிவோம்.